அவன் ஊருக்குள் வாழ்ந்திருந்த காலத்தில் பதுங்குவதில் பூனையைப் போலவும் பாய்வதில் சிறுத்தையைப் போலவும் பிறர்பொருளை கவ்விக் கொள்வதில் காகத்தைப் போலவும் அடுத்தவரை துவசம் செய்வதில் காட்டு யானையைப் போலவும் அன்பு காட்டுவதில் இளந்தூறலைப் போலவும் கோபத்தில் முகம் காட்டுகிற போது கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலவும் மவுனத்தில் சாரைப்பாம்பைப் போலவும் நடமாடித் திரிந்தான் அவன் மரணித்த போது எந்த ஒப்புமையும் தோன்றவில்லை அடங்கிப் போனான் பிரபஞ்சம் எனும் சுருக்கு வலைக்குள்…….
முன்னுரை “தலித்” எனும் சொல்லுக்கு பன்முகப்பட்ட பொருள் நிலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் உள்ளீடுகளில் ஒன்றாகவே விளிம்புநிலை எனும் சொல்லாடலும் அர்த்தம் பெறுகிறது. விளிம்புநிலை ஒரு முனை என்றால் அதன் இன்னொரு முனையில் அல்லது மையத்தில் ஒடுக்குதலின் இயக்கம் நிகழ்வதைக் காணலாம். அந்த இன்னொரு முனையும் ஒரு விளிம்புதான் என்று தலித்திய, இடது சாரியச் சிந்தனையாளர்கள் அதன் அடுக்கு முறையைக் கலைத்துப் போடுவதும் உண்டு. சாதியவாதிகளோ சேரியை ஊரின் கடைசியாகச் சுட்டுவர். ஆனால் தலித்தியச் சிந்தனையாளர்கள் சேரியை ஊரின் தொடக்கமாக முன்வைப்பதும் இங்கு கவனத்திற்குரியது. விளிம்பு நிலை மக்கள் குறித்து பேசும் சந்திரபோஸ் “நிலம், பணம், சாதி, அதிகாரம், அனைத்துவித ஆதிக்கம், மேட்டிமை, மேலாண்மை ஆகிய உரிமைகளுடன் மையத்தில் இருப்பவர்களால் புறந்தள்ளப்பட்ட – மறுத்து ஒதுக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட பழங்குடியினர், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், அரவாணிகள், விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டுள்ளப் பெண்கள், கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற விதவைகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினர் எனப் பரந்துபட்ட பொருள் வரையறையின