ஷோபாசக்தியின் ‘ கொரில்லா ’ ‘ ம் ’ புனைவுகள் ஈழப்போர் , புலம்பெயர்ச் சூழல் , புகலிடத்துச் சிக்கல்கள் குறித்து பேசுவதில் மிகவும் முதன்மை வகிக்கின்றன. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் தாயகப் பற்று , அவர்களின் அப்பாவித்தனம் , உணர்ச்சி பற்றி விரிவாக பேசுகின்றன. மட்டுமின்றி ஈழவிடுதலை இயக்கங்களின் அதிகார துஷ்பிரயோகம் இலங்கை , இந்திய இராணுவத்தின் வன்மத்தையும் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளன. ஷோபாசக்தியின் புனைவுகள் கட்டமைப்பிலும் வேறுபட்ட புதிய நிலைகளை அறிமுகம் செய்கின்றன. கொரில்லா சுமார் 20 பக்க அளவிலான ஒரு தஞ்சம் கோரும் கடித விண்ணப்பத்தின் மூலம் ஆரம்பமாகின்றது. அதன் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ள கவிதைகள் , பாத்திரங்கள் , இடங்கள் , பெயர்களுக்கான வரலாற்று குறிப்புகளுடனான விளக்கங்கள் ஓர் அகராதியியல் நிலையை தன்னகத்தே கொண்டுள்ளதை உணர்த்துகின்றது. இவ் அகராதியியல்த் தன்மை ஈழப்போர் , இயக்கங்கள் , மனிதர்கள் , புலப்பெயர்வு குறித்தான உண்மைத் தன்மையினை நமக்கு வெளிப்படுத்துவதோடு ஒரு சமூக , வரலாற்று நாவலாக தம்மை பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘ ம் ...